BREAKING NEWS

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள், மாநகராட்சி பொதுச் சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டன.

அவை, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அவ்வாறு தெருக்களில் சுற்றி திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றுக்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது.

 

அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச் செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்கச் சுகாதார ஆய்வாளர், மண்டல நல அலுவலர், மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தைப் பெற்றுச் சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும்போது, உரிமையாளருக்குத் திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும்.

மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாகச் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் 10ஆதேதி அன்று 16 மாடுகள், 11ஆம் தேதி அன்று 16 மாடுகள், 12ஆம் தேதி அன்று 8 மாடுகள் என மொத்தம் 40 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் மொத்தம் ரூ.62,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளைப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாகப் பராமரித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மீறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு, காவல்துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )