BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காததால் அரசு பள்ளிகள் தரம் மேம்படவில்லை.

தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காததால் அரசு பள்ளிகள் தரம் மேம்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளதால், இப்பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்களால் தேசிய அளவில் நடத்தப்படும் ஐஐடி, ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுவதால், என்.சி.இ.ஆர்.டி பாட திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், சமச்சீர் கல்வி திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, என்.சி.இ.ஆர்.டி பாட திட்டத்தை தான் மாநில அரசு பின்பற்ற வேண்டும் என எந்த சட்டப்பிரிவு கூறுகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பாததால் தான் அரசு பள்ளிகள் மேம்படவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும், எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், அரசு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், சமச்சீர் கொள்கையை பின்பற்றுவது தொடர்பான அரசு கொள்கை முடிவில் எந்த விதிமீறலும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )