தலைப்பு செய்திகள்
டெல்லியில் தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்த வந்த தமிழக விவசாயிகளை ரயில் நிலையத்திலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் நெல், கரும்புக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து டெல்லிக்கு தமிழக விவசாயிகள் ரயில் மூலம் வந்தனர். அய்யாக்கண்ணு தலைமையில் வந்த 80க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்பதால் அவர்களை திரும்பி செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் காவல்துறையினரின் அறிவுரையை ஏற்க மறுத்து விவசாயிகள் ரயில் நிலையத்தில் உள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பஞ்சாப் விவசாயிகளை போல காலவரையறையின்றி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.