BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியின் இறப்பையடுத்து அவதூரான வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பள்ளியின் விடுதி காப்பாளர் அருட்சகோதரி சகாயமேரி அவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. 

இதனை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோ வெளியானது. 

அதேவேளை, தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவுக்கு தனிப்பட்ட முறையில் குடும்ப ரீதியில் பிரச்சினை இருக்கலாம். அவரது சித்தி சரண்யாயின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்திருக்கலாம். அது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தனக்கு ஜாமின் கோரி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் விடுதி காப்பாளர் சகாயமேரி மனு தாக்கல் செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து திருச்சி மத்திய மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை ஜாமீனில் விடுதலையானார். இவரை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )