இன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!
இன்று கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்!! குவியத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள்!!

மலைகளின் இளவரசி கொடைக்கானல். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோடை சீசன் பார்வையாளர்கள் யாருமின்றி களையிழந்து காணப்பட்டது. தற்போது நடப்பாண்டில் கொரோனா பாதிப்புக்கள் குறையத் தொடங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கோடை சீசன் கோலாகலமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்க உள்ளது. இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. இன்று முதல் ஜூன் 2 ம் தேதி வரை இந்த கோடை விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, எம்.மதிவேந்தன் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர். பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் உருவாக்கப்பட்ட மயில், டைனோசர், வெள்ளைப்பூண்டு ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டு களிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் பழுதடையும் வாகனங்களை அகற்றவும் அவசர மற்றும் அவசிய தேவைகளுக்காக மீட்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பழுதாகும் வாகனங்களை சீரமைப்பதற்காக தனி குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணிபுரிய தனியார் தொண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன. கொடைக்கானல் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடைவிழா நடைபெறுவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
