ஆஸ்கர் கமிட்டி சூர்யா, கஜோலுக்கு அழைப்பு!! குஷியில் ரசிகர்கள்!!

உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம்.
கடந்த ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘சூரரைப்போற்று’ படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பல்வேறு சுற்றுகளைக் கடந்து சென்ற அந்தப் படம், இறுதிப் பட்டியலுக்கு முன்பாக ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்து வெளியேறியது. அதேபோல் ஜெய்பீம் படமும் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் போட்டியில் இடம் பெற்றிருந்தது.
இதைத்தொடர்ந்து அந்தப் படங்களின் நாயகனான சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அதேபோல் இந்தியாவிலிருந்து நடிகை கஜோலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டுதோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர்கள் விவரம் மாறுபடும், உலகளவில் இருந்து ஏராளமான பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறுவர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.