கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு .

தஞ்சாவூர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 26-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்த, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று தஞ்சாவூரில் எழுச்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி வரவேற்றார். மாநில தலைவர் மு.அன்பரசு, முன்னாள் மாநில செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்குக்கு பின், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அனைத்து மாவட்டத்திலும் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு புதிதாக பதவி ஏற்ற பின்னாலே, எதிர்கட்சியாக இருந்த போது கொடுத்த வாக்குறுதிகளையும், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதற்கான ஆயத்த கூட்ட ஏற்பாடு தான் இந்த எழுச்சி தின கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த அரசு உடனடியாக அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேசி, தேர்தல் கால வாக்குறுதிகளை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, காலமுறை ஊதியம் பெறாத சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், நூலக பணியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். முடக்கப்பட்ட விடுப்பு சரண்டரை விடுவித்திட வேண்டும், இந்த கோரிக்கைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். இதற்கும் தமிழக அரசு உடன்பட்டு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், வரும் 26-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்னால் அரைநாள் தர்ணா போராட்டமும், அதற்கு அடுத்தாற்போல் ஆக.23-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்குள் நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.
