தஞ்சையில் அதிமுக போராட்டத்தில், வைத்தியலிங்கத்தை சாடிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அதிமுகவில் ஒரு நாள் காமராஜ் தலைமை ஏற்கவும் வாய்ப்புள்ளதாக பேச்சு.

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஒரு பெருந்திரளான கூட்டத்தை, தெற்கு மாவட்டத்தில் கூடுமா, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா என்று கேட்டவர்கள் எல்லாம் மூக்கிலே கை வைத்து கொண்டு உள்ளார்கள். தஞ்சை மாவட்டம் யாருக்கும் தனிப்பட்ட ஒருவருக்காக அல்ல. அதிமுக என்பது தொண்டர்களுக்கானஇயக்கம். இதில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம். ஒரு நாள் காமராஜ் தலைமை ஏற்கலாம்.
ஒரு நாள் இங்கு இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்கலாம். தொண்டர்கள் இரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம். இது அவருக்கு – இவருக்கு என்றெல்லாம் கிடையாது என பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போது தற்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் தேர்தல் வைக்கப்பட்டு, கழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் மூலம் தொண்டர்கள் தேர்வு செய்கிற பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார்.
அதிமுக பொறுத்தவரை யாரை நம்பியும் இந்த இயக்கம் இல்லை, தொண்டர்களை நம்பி உள்ளது. தொண்டர்கள் பெரும் பகுதி, அதாவது 100% தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கிறார்கள். எடப்பாடி பின்னால் எப்போதும் அதிமுக இருக்கும் என்று கூறினார். மேலும் பயிர் காப்பீடு செய்வதற்கு எந்த இன்சூரன்ஸ் கம்பெனி என்று தெரியவில்லை, அதனால் உடனடியாக எந்த இன்சூரன்ஸ் கம்பெனி என்பதை அறிவித்து, ப்ரீயம் செலுத்துவதற்கான தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலக்கெடு முடிய உள்ளதால், இன்னும் ஒரு காலம் நீடிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.