செஸ் ஒலிம்பியாட் பேனரில் ஸ்டாலின் படம் அருகே மோடி படத்தை ஒட்டிய அர்ஜூன் சம்பத்: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

75-வது சுதந்திர தின பவள விழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் பேனரில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை ஒட்டியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை நடைபெற உள்ளது. அதற்கானப் பணிகள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வருகின்ற 75-வது சுதந்திர தின பவள விழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இன்று மாலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் புகைப்படத்துடன் கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த பேனர் ஒன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. இதனைக் கண்ட அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மு. க. ஸ்டாலின் புகைப்படம் அருகே ஓட்டினர்.