மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுமா ஆரப்பாளையம் பேருந்து நிலையம்? மதுரையின் நகரப் பேருந்து பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.

மதுரை மத்திய சிறைச்சாலையை புறநகருக்கு மாற்றத் திட்டமிடப்பட்டு வருவதால், இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை 100 ஏக்கர் பரப்பளவுள்ள சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரையின் புறநகர் பேருந்து போக்குவரத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தையும் மையப்படுத்தியே இயங்குகின்றன. இதில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்துதான் மேற்கு மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும் பெங்களுரு, ஓசூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருமங்கலம், பெரியார் நிலையம், மாட்டுத்தாவணிக்கும் ஏராளமான நகரப் பேருந்துகளும் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.
ஆனால் 2 ஏக்கருக்கும் குறைவான இடத்திலேயே இந்நிலையம் உள்ளதால் மிகுந்த இடநெருக்கடியில் செயல்படுகிறது. ஒரே நேரத்தில் 30 பேருந்துகளைக்கூட இங்கு நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு பேருந்துகளாக புறப்படும் வரை காத்திருந்து, அடுத்தடுத்த பேருந்துகள் உள்ளே வரும் நிலை உள்ளது. நேரம் கருதி சில பேருந்துகள் நிலையத்துக்கு வெளியிலேயே நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் சூழல் உள்ளது. நகரப் பேருந்துகள் நிலையத்துக்குள்ளேயே செல்வதில்லை. அவை பேருந்து நிலையத்துக்கு முன்புள்ள சாலை, வைகை கரை நான்கு வழிச்சாலை போன்ற இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், “23 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பாட்டுக்கு வந்த மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கே இன்னும் அனைத்து பயணிகளும் செல்வதில்லை. திருமங்கலம், மண்டேலாநகர், விரகனூர் சந்திப்பு போன்ற இடங்களில்தான் பெரும்பாலான பயணிகள் ஏறவும், இறங்கவும் செய்கின்றனர். இந்நிலையில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை புறநகருக்கு மாற்றினாலும் இதுபோன்ற நிலைதான் ஏற்படும். மேலும் பெரியார் பேருந்து நிலைய புதுப்பிப்புப் பணிகளுக்கு பிறகு அங்கும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையமும் மூடப்பட்டுவிட்டது. இதனால் நகரப்பேருந்துகளுக்கும் நிற்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கடும் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை மத்திய சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும். அங்கு போதுமான இடவசதி இருப்பதால் பெரியார் பேருந்து நிலையத்தில் இடமில்லாமல் தவிக்கும் நகரப் பேருந்துகளையும் ஆரப்பாளையத்திலிருந்து இயக்கலாம். தவிர ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மூடப்பட்ட காம்ப்ளக்ஸ் நிலைய, ஜான்சிராணி பூங்கா சுற்றுலா வாகன நிறுத்தங்களுக்கும் இங்கு இடம் ஒதுக்கினால் நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். மதுரை நகருக்குள் வேறு எங்குமே இவ்வளவு பெரிய இடம் இல்லை என்பதால் இதனைப் பயன்படுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
