சேலம் வாழப்பாடியில் ‘பாரதிய ஜனதா கட்சி, இசுலாமியர், கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல’ என, இக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேச்சு

வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற, கட்சி வளர்ச்சி குறித்த ஆய்வு கூட்டத்தில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
அனைத்து பகுதிகளிலும் கிளைகளை அமைத்து, கிராமப்புற மக்களிடையே கட்சியை கொண்டு செல்வது, பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, பாஜகவிற்கு ஓட்டு வங்கியை ஏற்படுத்துவது குறித்து, கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில், கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சண்முகநாதன், முன்னாள் தலைவர் வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் அயோத்தி ராமச்சந்திரன், கேசவன், பழனிவேல், இளைஞரணி குணசேகரன், ராஜா, வெங்கடாசலம், பூபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த இப்ராஹிம் கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
இசுலாமியர்கள் கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல பாஜக. இசுலாமியர்களும் கிறித்தவர்களும் அதிகளவில் வசித்து வரும் மணிப்பூர் மாநிலத்தில், பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜக சிறுபான்மையருக்கு எதிரான கட்சி என, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விஷமத்தை பரப்பி வருகின்றன.
உயர்சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை பாஜக வரவேற்கிறது.
இந்துத்துவா சித்தாந்தத்தை கொண்ட, பாஜகவில், இசுலாமியரான எனக்கு, உயர்ந்த பதவியை வழங்கியதோடு, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் மக்களவை உறுப்பினர் இடங்களை பாஜக கைப்பற்றும்’ என்றார்.