ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் கார்த்திக். 50 வயதான இவர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கும் இனிப்பத்தில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
இன்று மதியம் வேலை முடிந்ததும் வழக்கம் போல மிதி வண்டியில் சேத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிக வேகத்தில் வந்த கார் சைக்கிள் மீது மோதியதில், கார்த்திக் தூக்கி கண்மாய்க்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. ஓட்டுனர் காரை அந்த இடத்திலேயே விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கண்மாய்க்குள் கிடந்த கார்த்திக்கை மீட்டு ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சேத்தூர் ஊரக காவல் துறையினர், காரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் ம.வெள்ளானை பாண்டியன்.