ஓமலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் தூய்மை பணியாளர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்த பேரூராட்சி தலைவர்

சேலம் மாவட்டம் ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மே தின விழாவில் அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய பேரூராட்சி தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன் மே தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து பேசினார். மேலும் உலகம் கட்டமைக்கப்பட உழைப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது எனவும் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க உழைப்பாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் உழைப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் சார்பிலும் அமைச்சர் ராஜேந்திரன் சார்பாகவும் தனது சார்பிலும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் பேசிய அவர் என்றும் உழைப்பாளர்களுக்கு உறுதுணையாக தாங்கள் இருப்போம் எனவும் உறுதியளித்தார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட பேரூராட்சியின் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இட்லி, பொங்கல், இனிப்பு உள்ளிட்ட சைவ விருந்து அளிக்கப்பட்டது.