மாதவன் என்பதற்கு என்ன அர்த்தம் ?

மஹா லெட்சுமியை மார்பில் வைத்திருப்பவன்!பாற்கடலைக் கடைந்த போது ஸ்ரீலக்ஷ்மி தோன்றி பெருமாள் மார்பில் வாசம் செய்வதால் – மாதவன்.
கடைந்த பின் பெருமாளைப் பார்க்கும் போது அவர் கூந்தல் அவிழ்ந்து – கேசவன்.
அதனால் தான் ஆண்டாள் ”வங்க கடல் கடைந்த மாதவனைக் கேசவனை ” என்று வரிசைப் படுத்துகிறார்.
அடுத்த வரியை பாருங்கள் – ”திங்கள் திருமுகத்து” என்கிறார். திருப்பாவை ஆரம்பத்தில் “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று உவமை சொன்ன ஆண்டாள் இதில் ”திங்கள் திருமுகத்து” என்கிறார்.
இந்த ஒரு பாசுரம் தவிர திருப்பாவையில் எங்குமே ”திருமுகத்து” என்ற பிரயோகம் கிடையாது.லட்சுமி மார்பில் வந்த பிறகு உவமையும் கிடையாது.பெருமாளின் முகம் திங்கள் ‘திரு’ முகத்தானது.
திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தத்தில் “ பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா” என்கிறார்.இங்கேயும் ஆமைக்குப் பின் கேசவா என்பதைப் பார்க்கலாம் !
நம்மாழ்வார் எம்பெருமான் அடியார்களுக்கு மட்டுமல்லாமல் அடியார்களைச் சேர்ந்த அவர்களுடன் சம்பந்தம் பெற்ற மற்றவர்களுக்கும் அருள் செய்கிறான் (கீழ் ஏழு மேல் ஏழு தலைமுறையினரும் அடியார்கள் ஆயினர் ).
ஆண்டாள் ”எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நா மாட்செய்வோம்”என்று சொல்லிவிட்டு ”எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்” என்கிறார்.
