தகைசால் தமிழரென நிரூபித்த நல்லகண்ணு: ஸ்டாலின் வழங்கிய நிதியை அரசுக்கே திருப்பி வழங்கினார்.

தகைசால் தமிழர்’ விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்ச ரூபாய் நிதியை அரசுக்கே திருப்பித் தந்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். முன்னதாக, இன்று காலை 8.35 மணிக்குக் கோட்டை அருகில் வந்த முதல்வர் ஸ்டாலினைத் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்று, காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்தார்.
விழாவில் தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருதுகள், மாநில இளைஞர்கள் விருதுகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். மாற்றுத் திறனாளி நலனுக்காக அரும் பணியாற்றியவர்களுக்கான விருது, சிறந்த மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுக்கான விருதுகளையும் வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார். தகைசால் தமிழர் விருது பெற்ற ஆர்.நல்லகண்ணு, அரசு வழங்கிய 10 லட்ச ரூபாய் நிதியை அரசுக்கே திருப்பித் தந்தார். அந்த பத்து லட்சத்துடன் தனது சொந்த நிதி 5000 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து10,05,000 ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் நல்லக்கண்ணு.