செம்பனார்கோயில் கிராம ஊராட்சியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி

தமிழக அரசு சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு சூப்பரு எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் செம்பனார்கோயில் கிராம ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு ஒன்றிய ஆணையர் மஞ்சுளா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வரத்தினம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். இதில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியின்போது, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்ப்போம், மக்கும் குப்பை- மக்காத குப்பை என தரம் பிரித்து தினமும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்போம், பொது இடங்களை நம் வீடுகளைப் போன்று தூய்மையாக வைத்திருப்போம், நீர் நிலைகளை பாதுகாப்போம், மழைநீர் தொட்டிகளை பராமரித்து மழை நீரை சேகரிப்போம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் கலந்து கொண்டவர்கள் கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர்.
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று செம்பனார்கோவில் கடைவீதியில் முடிவடைந்தது. அங்கு அனைவரும் சுகாதாரத்தை காப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.
