நெல்லை, அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோவில் ஆவணி தேரோட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.
இதில் திரளான அன்பு கொடி மக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா செப் 02,ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அன்னப் பச்சி, சூரியன், நாகம், பூம்பல்லாக்கு, குதிரை, இந்திரன், காளை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட 11 வாகனங்களில் வீதிவுலா வந்து அன்பு கொடி மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10ம் திரு விழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி எழுந்தருளி கோயிலை சுற்றி பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி அன்பு கொடிமக்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மேளம் மற்றும் நையாண்டி மேளமும் சிறப்பு வானவேடிக்கையும், சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.