தஞ்சையில், இன்று மாலை மின் கட்டணம் உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.

சசிகலா – வைத்திலிங்கம் சந்திப்பு திட்டமிட்ட ஒன்று. அதிமுகவை அழிக்கும் செயல் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி.
மின் கட்டணம் உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் மட்டும் மாலை நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.

தஞ்சை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மின் கட்டண உயர்வை நினைத்து மக்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகின்றனர்.
உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கையாகவும், மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது என அவர் தெரிவித்தார்.

தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து கட்சி அலுவலகம் செல்வேன் என சசிகலா கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, யூகங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது.
அதிமுகவின் ஒருங்கிணைந்த தலைவர் எடப்பாடி தான். எடப்பாடி தலைமையில் தான் அதிமுக உள்ளது. வேறு யாரும் எதைச் சொன்னாலும், அவர்கள் ஆசைக்கு சொல்லிக்க வேண்டியது தான். நடக்கப்போவதில்லை என்றார்.

மேலும் சசிகலா – வைத்திலிங்கம் சந்திப்பு தொடர்பாக கேட்டபோது, அவர்கள் எதார்த்தமான சந்திப்பு என்று கூறுகிறார்கள். ஆனால் இது திட்டமிட்டு நடைபெற்ற ஒன்று. அதிமுகவை வளம் பெற செய்யும், பலம் பெற செய்யவும், அதிமுகவால் பலன் அடைந்தவர்கள் நினைக்க வேண்டும்.
ஆனால் அதை விட்டுவிட்டு திமுகவுக்கும் துணை போற வேலையில் ஈடுபடுது போன்ற வேலைகள் எல்லாம், அதிமுகவை அழிக்கும் வேலையாக தான் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
