தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, ஆளுநர் மாளிகை, பழமையான தேவாலயங்கள் உள்ளடக்கிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாகும். 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாசிலாமணி நாதர் கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரை நகரமாக இது திகழ்கிறது. இங்கு தினம்தோறும் வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடற்கரையில் உள்ள தடுப்புச் சுவரை மீறி கடல் அலைகள் சத்தத்துடன் மேல் எழும்புகிறது.
இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் கடல் அலைகளில் குளிப்பதும், பாறைகளில் மேல் ஏறி நின்று செல்பி எடுத்தும் வருகின்றனர். ஆண்டுதோறும் கடல் அலைகளில் சிக்கி பலர் உயிரிழக்கும் நிலையில்,..
கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை எச்சரிப்பதற்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளும், காதல் ஜோடிகளும் கடல் அலையில் விளையாடுவதும், குளிப்பதுமாக உள்ளனர்.
கடல் சீற்றம் காணப்படும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்காதவாறு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டு உயிர் சேதங்களை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.