ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்; அமைச்சர், கலெக்டர் தப்பினர்..

ஊட்டி அருகே வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தபோது வாகனம் நிலைதடுமாறியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
ஊட்டி அடுத்த பிங்கர்போஸ்ட் அருகே பட்பயர் பகுதியில் நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் இருவரும் பிக்கப் வாகனத்தில் ஏறி வந்தனர். அப்போது வளைவில் அமைச்சர், கலெக்டர் ஆகியோர் சென்ற வாகனம் திடீரென நிலைதடுமாறியது. இதனால் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருந்தது.
இதையடுத்து, சுதாரித்து கொண்ட ஓட்டுனர் பிக்கப் வாகனத்தின் பிரேக்கை பிடித்ததால் நூலிழையில் வாகனம் நின்றது.
இதையடுத்து வாகனத்தில் இருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த விபத்தில் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனே பிரேக் போட்டதால் அனைவரும் அதிஷ்டவசமாக விபத்திலிருந்து தப்பினர்.