அம்யாவு பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஆசிரியை- ஆசிரியர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம்
சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கே.அய்யாபட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக வின்சென்ட் பால்ராஜ் உள்ளார்.
இவர் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். இவர் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறார்.
சுற்றுலாவுக்காக ஆகும் வாகன போக்குவரத்து மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து செலவையும் தலைமையாசிரியர் வின்சன் பால்ராஜ் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அமலதாஸ், காளியப்பன், தெரசா செல்வராணி, கிரிஜாபாய், கிளாரா ரோஸ்லின் மேரி, கேத்தரின் லலிதா பாய் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றன.
இந்த ஆண்டு குழந்தைகள் தின விழாவையொட்டி நேற்று காலை அப்பள்ளியில் படிக்கும் 120 மாணவர்களுடன் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மதுரை சுற்றுலா சென்றனர். அங்கு மதுரை விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பக்குளம், ஆயிரம் கால் மண்டபம், எக்கோ பூங்கா, காந்தி மியூசியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு,
மாணவர்களை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.