மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வந்து இறங்கிய கல்வி சீர்.

திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆண்டுதோறும் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
பள்ளிக்கும், மாணவர்களுக்கும் கல்வி கற்க தேவையான பொருட்களை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், தன்னார்வலர்களும் வழங்குவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால், கல்வி சீர் வழங்கும் நிகழ்வு நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு கல்வி சீர் எடுக்கும் விழாவானது நடைபெற்றது. விழாவை வட்டார கல்வி அலுவலர்கள் ரெஜிபெஞ்சமின், ஜெஹ்ரா பர்வீன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் பெற்றோர்கள் பள்ளி சீர்வரிசை பொருட்களை தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முழுங்க ஆட்டம் பாட்டத்துடன் வீதி வீதியாக ஊர்வலமாக வந்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் கல்வி குறித்த விழிப்புணர்வு பாடல் பாடினார்.
அப்போது பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், எழுத்தறிவு திட்டத்தில் பயிற்சி பெறுபவர்கள் தலைமை ஆசிரியரின் பாடலுக்கு கும்மி அடித்து ஆடினர்.
மேலும் பள்ளி மாணவன் சிலம்பாட்டம் ஆடி சீர்வரிசை கொண்டு வந்த பெற்றோர்களை உற்சாகப்படுத்தினார்.
ஊர்வலமாக பள்ளியை வந்தடைந்து சீர்வரிசை கொண்டு வந்த நபர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.