தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 35 வது ஆண்டு விழா மார்ச் 11ஆம் தேதி மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் தமிழ்நாடு அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை, இயக்குநர் ஆர்.லலிதா IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் சிறப்பு வாய்ந்த இப் பல்கலைக்கழக ஆண்டு விழாவில் தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், தாங்கள் பயின்ற காலத்தில் எப்படி சுற்றுச்சூழல் இருந்ததோ அதே சுற்றுச்சூழல் மற்ற வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளன என்றும்.
மாணவர்களாகிய நீங்கள் எந்தத் துறையில் சிறப்பாக செயல்படுகிறீர்களோ அந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும், இக்காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும், மற்றும் அதன் நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமை உரையில் பேசும் போது, நமது பல்கலைக்கழகத்தில் பயின்று இன்று ஐஏஎஸ் ஆக வந்திருக்கும் லலிதா IAS அவர்களை பாராட்டுவதாகவும், சமூக ஊடகங்களில் மாணவர்களாகிய நீங்கள், அதிக நேரத்தை வீணாக்காதீர்கள், தேவையான அளவிற்கு பயன்படுத்தி திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன, பல்கலைக்கழக டெக்மேக் இதழினை பல்கலைக்கழக வேந்தர் வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் வேலுச்சாமி, பதிவாளர் ஸ்ரீவித்யா, தொழில் முனைவோர் ராஜ மகேஸ்வரி, கல்வி புல முதன்மையர் பேராசிரியர் ஜார்ஜ், பெரியார் பாலிடெக்னிக் முதல்வர் பேராசிரியர் மல்லிகா உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.