திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூர் சன்னதி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிக்கு நேற்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாவட்ட ஆட்சியர், அங்கிருந்த மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்தும், பள்ளியில் கழிவறை வசதி, குடிநீர் வசதி குறித்தும், உணவு தரமாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிவறை சுத்தமாக உள்ளதா என்றும், சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்றும் மாணவர்களிடம் கேள்வி கேட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பள்ளியில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய ஆணையர் மீனா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி கணேஷ் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் செந்தில், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.