BREAKING NEWS

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூத்துக்குடி காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம்: பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாங்குளம் பகுதியில் உள்ள முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் இன்று (11.04.2023) 9வது மற்றும் 10வது வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், நாம் எங்கு கல்வி பயில்கிறோம் என்பது முக்கியமில்லை. அரசு பள்ளிகளில் கல்வி பயின்றவர்களும் சமுதாயத்தில் உயரிய பதவியில் உள்ளார்கள்.

எந்த சூழ்நிலையிலும் கல்வி பயின்று சமுதாயத்தில் நீங்கள் சாதனையாளர்களாக வரவேண்டும். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியதுபோல் ‘ கனவு காணுங்கள்” என்பதற்கிணங்க நாம் என்னவாக இருக்க ஆசைப்படுகிறோமோ அதன்படி நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும், அவ்வாறு உழைத்தால்தான் வருங்காலங்களில் உயரிய பதவிகளில் அமர முடியும்.

 

 

எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துகொண்டு இலக்கை நோக்கி பயணித்தால் வாழ்வில் நல்ல நிலையை அடைய முடியும். விளையாட்டில் விதிமுறைகளை கடைபிடித்து விளையாடினால்தான் வெற்றி பெற முடியுமோ அதுபோல் நமது வாழ்க்கையிலும் நமக்கென்று விதிமுறைகளை கடைபிடித்தால்தான் நமது இலக்கை அடையமுடியும்.

 

மேலும் வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகும். தோல்வியை கண்டு சோர்வடையாமல் அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை தெரிந்து கொண்டாலே தற்கொலை எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்க முடியும்.

 

எந்தெவொரு சூழ்நிலையையும் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் அணுக வேண்டும். நன்றி சொல்லும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்படி கேட்டு நடந்தால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும், அதை கண்டுபிடித்து நல்ல வழியில் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

 

 

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி கேள்விகள் கேட்டு சிறப்பாக பதிலளித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் பாராட்டினார். அதன்பின்னர் மாணவ மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கான பயிற்சி குறித்து தூத்துக்குடி மன நல மருத்துவர் சிவசைலம் அவர்களும், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின்ஜார்ஜ் அவர்களும் விளக்கமாக எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

 

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் முத்துகருப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளி செயலர்  பாலமுருகன், பள்ளி நிர்வாக கண்காணிப்பாளர்  சரோஜா உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS