ராஜபாளையத்தில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அகற்றினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியின் 12 வது வார்டு உட்பட்டது அண்ணா நகர் இப்பகுதியில் அமைந்துள்ள கொண்டநேரி கண்மாயின் நீர் நிலை புறம்போக்கு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டணங்களாகவும் நாய் பண்ணை உள்ளிட்ட வியாபாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இப்பகுதியில் இருந்த ஒரு சில கட்டடங்கள் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டது. நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை காலி செய்து கொள்ள வலியுறுத்தி அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் இன்று வரை அவ்விடத்தில் இருந்து வெளியேறவில்லை இதனால் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் இன்று நடைபெற்றது.
பணிகள் தொடங்கும் போது ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர் ஆனால் ஏற்கனவே போதுமான அவகாசம் வழங்கப்பட்டதால் மீண்டும் அவகாசம் தர முடியாது என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பிறகு மக்கள் வசிக்காத வீடுகள் மற்றும் கட்டடங்களை மட்டும் அகற்ற நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பொக்லின் வாகனம் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் முதற்கட்டமாக இடித்து அகற்றப்பட்டது.