பொதுமக்களிடம் திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அமர்வில் மனுத்தாக்கல்

பொதுமக்களிடம் திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச்செயலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அமர்வில் மனுத்தாக்கல்
ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது OTPயை பெற இடைக்கால தடை விதித்து மதுரை அமர்வு உத்தரவு.
உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் OTP விபரங்களை கேட்கக் கூடாது – நீதிபதிகள்
வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்த்து உத்தரவு
டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும் வழக்கு தொடர்பாகவும் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த பொதுநல வழக்கு.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ஆர்.பாரதி கண்ணன், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன. அதனடிப்படையில் வரும் OTP எண்ணை கேட்கின்றனர். உறுப்புனர் ஆகவில்லை எனில் மகளிர் உரிமைத் தொகை போன்ற சலுகைகள் கிடைக்காது என மிரட்டுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான வீடியோ சமர்ப்பிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், “OTP எதற்காக கேட்கிறார்கள்? OTP விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகையில் எதற்காக கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசுத்தரப்பில், “திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “நீங்கள் அரசு வழக்கறிஞரா? திமுக வழக்கறிஞரா? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ஆதார் விபரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம், அமெரிக்க நிறுவனத்திற்கு- இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறு தான் கையாளப்படுவார்களா?
தனது கட்சியின் உறுப்பினர் விபரங்களை சேகரிப்பதில் தவறில்லை. ஆனால் அந்த விபரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும் என்பது தொடர்பான எந்த திட்டமும், விபரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்ல. இது மிகவும் ஆபத்தானது என குறிபிட்ட நீதிபதிகள்,
தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி, ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது.
தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது OTPயை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் OTP விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள்,
வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும் வழக்கு தொடர்பாகவும் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.