குவைத்துக்கு வேலைக்கு சென்ற தனது கணவர் காணவில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம். கயத்தாறு தாலுகா, செட்டி குறிச்சி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி ம.ஈஸ்வரி என்பவர் தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
எனது கணவர் கடந்த கடந்த 16.7.2025 அன்று சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் குவைத்திற்கு சென்று மறுநாள் அதிகாலை குவைத்து சென்றடைந்தார்.
அவர் குவைத்தில் இறங்கியதும் வாட்ஸ்அப் மூலம் நான் குவைத் விமான நிலையம் வந்து விட்டதாகவும், தனது நண்பர்களுக்கு தகவலும் கொடுத்துவிட்டதாகவும் போன் செய்தார். பின்னர் தனது கைரேகை சரியாக பதியாத காரணத்தினால் போலீஸ் விசாரணையில் தான் இருப்பதாகவும் கூறினார்.
பின்னர் தனது கைபேசி சார்ஜ் இல்லாததால் செயல் இழந்து விடும் எனவும் கூறினார். அதன் பின்னர் எங்கள் ஊர் முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் அனுப்பி இருந்தார்.
மேலும் நான் ஐ.எம்.ஓ செயலி மூலம் 17ம் தேதி போன் செய்ததற்கு என் மகனிடம் நான் அம்மாவிடம் பிறகு பேசுகிறேன் என்று சொன்னார். அதன் பிறகு எந்த தகவலும் இல்லை அவர் வேலைக்கு சென்ற நிறுவனத்தில் கேட்டதற்கு அவர் எங்கள் நிறுவனத்திற்கு வரவில்லை என தகவல் அளித்தனர்.
மேலும் எங்களுக்கு தெரிந்தவர்களை விசாரித்து விமான நிலையத்தையும் விட்டு வெளியே சென்று விட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காணாமல் போன எனது கணவரை தமிழக அரசு கண்டுபிடித்து தருமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.