உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோத போக்கை கண்டித்து போராட்டம் அறிவிப்பு!

மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வேளையில் இதுநாள் வரை நிதி அமைச்சர் நியமிக்கப்படாத நிலை இருந்து வருகிறது.
இதனால் நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தணிக்கை துறைகளில் பணியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவசர கதியில் செயல்படுத்த தீவிரம் காட்டும் தலைமை தணிக்கை இயக்குநர் அவர்களின் பணியாளர் விரோத நடவடிக்கைகள் வருந்தத்தக்கது.
இது புதியதாக அமைந்துள்ள மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கை என எமது சங்கம் கருதுகிறது.
பணியாளர்கள் விரோத நடவடிக்கைகள் பின்வருமாறு—
உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் மாநில அரசு தணிக்கைத் துறையில் தணிக்கைப் பணியாளர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளும் நேரடி நியமன உதவி இயக்குநர் விதிகளை ஏற்கனவே தலைமைத் தணிக்கை இயக்குநர் இயற்றிவிட்டார்.
இது போதாது என்று தற்போது துறை மறுசீரமைப்பு என்ற பெயரில் இரண்டு துறைகளை இணைப்பது, அதன்மூலம் பல பணியிடங்களை குறைப்பது என அதற்காக துரிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு துறையிலேயே இருக்கும் சிலர் துணைபோகும் துரோகச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மறுசீரமைப்பையும், இணைப்பையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.
இல்லையெனில் தமிழ்நாடு உ.நி.த. ஊழியர் சங்கம் மீண்டும் தலைமைத் தணிக்கை இயக்குநரைக் கண்டித்து தீவிர போராட்டத்தை உடனே தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் மன்ற மாநில மையம் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
